பழகத் தெரிய வேணும் – 10

 (சிடுசிடுப்பான கடைக்காரர்கள்) 

 


புன்னகை புரியும் முகமாக இல்லாதவன் கடை திறக்கக் கூடாது” (சீனப் பழமொழி).

 

சீனாவிலிருந்த ஒருவர் தன் எட்டு வயது மகனை மலேசியாவுக்கு கப்பலில் ஏற்றிவிட்டார், தனியாக.

அங்கு போய் பிழைத்துக்கொள்!’ என்ற அறிவுரை மட்டும் கூறி வழியனுப்பினார்.

என் பக்கத்து வீட்டில் குடியிருந்த பெட்ரீஷியா என்ற கணக்காய்வாளர் தன் தந்தையைப்பற்றிக் கூறிய கதை இது.

 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு சிறு வயதில் தனியாக ஏதோ ஒரு நாட்டுக்கு அனுப்புவார்களா!

 

நேர்மையாக இரு. கடுமையாக உழை,’ என்று தான் போதித்த பாடங்களை வைத்துக்கொண்டு மகன் பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கை அந்த தந்தைக்கு இருந்திருக்கிறது.

 

சிறுவன் வாங் ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.

பள்ளிக்கூடத்தில் அவன் கல்வி பெறவில்லை.

ஆனாலும், கடின உழைப்பு, எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிறரை மரியாதையாக நடத்துவது முதலிய குணங்கள் அவனை சொந்தக்கடை நடத்தும் அளவிற்கு படிப்படியாக உயர்த்தின.

தன்னைப்போல் தன் குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாது என்ற உறுதியுடன், அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினான் வாங்.

அவர்களது மதிப்பெண்கள் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தபோது அவர்களுக்கு அடி விழும். மாறுகின்ற காலத்தை ஒட்டி நடக்க குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்று கடையின் ஓரத்தில் ஒரு கணினி.

சாயங்கால வேளைகளில் விளையாடி முடிந்ததும், எல்லாக் குழந்தைகளையும் ஓர் அறையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகச் சொல்லி, கதவை வெளியில் சாத்திவிடுவான் வாங்.

சிறிது நேரம் சும்மா உட்கார்ந்திருப்போம். அப்புறம், என்ன செய்வதென்று புரியாது, படிக்க ஆரம்பித்துவிடுவோம்,’ என்கிறாள் பெட்ரீஷியா.

தந்தை எதிர்பார்த்தபடியே, எல்லாரும் உயர்கல்வி பெற்று, நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள்.

தந்தை தன் வாழ்க்கையைப்பற்றி அடிக்கடி கூறி வளர்த்திருந்ததால், அவருடைய நற்குணங்கள் குழந்தைகளிடமும் அமைந்தன.

 

கடையில் வேலை செய்யும் ஒருவருக்கு அவசியம் இருக்கவேண்டிய குணங்களை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

 

ஒரு கடைக்காரர் எப்படி இருக்கக்கூடாது?

 

1. பல வருடங்களுக்கு முன்பு, கோலாலம்பூரில் பிரபலமாக இருந்த ஒரு கிளினிக்கிற்குப் போயிருந்தேன். சிறிது தாமதத்திற்குப்பிறகு மருத்துவரின் அறைக்குள் நுழைய அனுமதி.

அந்த மனிதரோ, நான் வந்ததைக் கவனியாது, சுவாரசியமாக ஒரு ஜனரஞ்சகமான தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தார்.

நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.

அது புரிந்தோ என்னவோ, மெல்ல தலைநிமிர்ந்து, “கொஞ்சம் இருங்கள்,” என்றுவிட்டு, மீண்டும் படிப்பதில் ஆழ்ந்தார்.

அடுத்த முறை போனபோது, நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை.

அங்கிருந்த சீன மருத்துவரின் அறைக்குள் எதற்கோ நுழைந்தவர், என்னை அங்கு பார்த்து திடுக்கிட்டார்.

நம் இனத்தவரே நம்மை ஒதுக்குகிறார்களே!’ என்று வருந்தியிருப்பார்.

இதில் யார்மேல் தவறு?

 

கடைக்கு வரும் வாடிக்கையாளரோ, மருத்துவமனைக்கு வரும் நோயாளியோ, நம்மை நாடி வருகிறவர்களின் தேவை அல்லது பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள ஆர்வம் காட்டவேண்டாமா?

 

சுரத்தே இல்லாது, வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது ஒருவரை அவமதிப்பதுபோல்தான்.

 

2. அதே கிளினிக் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும் என்று தெரிந்து, நான் போனபோது, எட்டே முக்கால் மணி.

கொஞ்சம் முன்னாலேயே வருவதற்கென்ன?” என்று ஒரேயடியாகக் கோபித்தாள் மருந்துகளை எடுத்துக் கொடுக்கும் பெண்.

இனி யாரும் வராவிட்டால், வீட்டுக்கு முன்னதாகவே போய்விடலாமே என்ற ஆசை அவளுக்கு. உடல்நலக்குறைவுடன் வருகிறவர்களிடம் இனிமையாகப் பேச அவளுக்குத் தெரியவில்லை. நிர்வாகத்தினர் சொல்லிக்கொடுக்கவும் இல்லை.

 

3 . இரவில் ஒரு மளிகைக்கடைக்குப் போனபோது, கடை மூட அரைமணி இருந்தது.

நாற்பது வயது மதிக்கத்தக்க கடைச் சிப்பந்தி, “கடைசி நிமிஷத்திலே வந்து உயிரை வாங்கறீங்களே!” என்று இரைந்தார்.

நாள் முழவதும், குறைந்த சம்பளத்தில் வேலை செய்து, களைத்துப்போயிருக்கிறார், பாவம்!’ என்று புரிந்தது. இவரை எப்படிக் கோபிப்பது?

சாமான்கள் எங்கே இருக்குன்னு காட்டினா, நாங்களே எடுத்துக்கறோம்,” என்றேன்.

அவருடைய வேலை பாதியாகக் குறைய, இறுதியில், “இன்னிக்கு ரொம்ப வேலை,” என்றார், மன்னிப்புக் கேட்கும் வகையில்.

வாடிக்கையார்களை உற்ற நண்பர்கள்போல் நடத்தினால் வியாபாரம் செழிக்கும்.

 

4. சில கடைக்காரர்கள் தாம் விற்கும் சாமான்களை ஒரேயடியாகப் புகழ்ந்து, வலுக்கட்டாயமாக நம் தலையில் கட்டப்பார்ப்பார்ப்பார்கள்.

நான் இவ்வளவு சொல்கிறேன், உங்களுக்கு வேண்டாமா?” என்று ஒரு சீனர் இரைய, எரிச்சல் தாங்காது, “உங்களுக்குத்தான் இவ்வளவு பிடித்திருக்கிறதே! நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,” என்று நடையைக்கட்டினேன்.

 

5. நானும், மகளும் ஒரு கடையில் சாப்பிடும்போது, மடியில் இருந்த ஒருவயதுப் பேரனுக்கும் ஒரு வாய் ஊட்டினேன்.

பிள்ளைக்கும் குடுத்தீங்களே!” என்று மூன்று பேருக்கான பணத்தைக் கேட்டான் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவன்.

சீக்கிரமே பெரும் பணக்காரனாகிவிடலாம் என்று எண்ணியிருப்பான். அதனால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை அவன் அறியவில்லை.

(அதற்குப்பிறகு நாங்கள் அங்கு போகவில்லை. கடையையும் காணோம்).

 

6. எங்கள் வீட்டருகே, தன் வீட்டின் முன்பகுதியையே மளிகைக்கடையாக மாற்றி இருந்தார் அந்த மலாய்க்காரர். பாக்கிச் சில்லறை கொடுப்பதில் ஏமாற்றுவது, யாரும் பார்க்காத சமயத்தில் அழுகலான உருளைக்கிழங்கை அவர்கள் சாமான்களுடன் சேர்த்துப் போட்டுவிடுவது – இதிலெல்லாம் கைதேர்ந்தவர். எல்லாரிடமும் எரிந்துவிழுவார். அந்த இடமே அசுத்தமாக இருக்கும்.

யாரோ புகார் செய்ய, ‘இப்பகுதியில் உள்ள வீடுகளில் கடை வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. வேறு இடத்திற்குப் போகவும்,’ என்று அரசாங்க சார்பில் கடிதம் வந்திருந்தது.

சில வார்த்தைகள் புரியாது, என்னை விளக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.

பொறாமை!” என்று புகார் செய்தவர்களைத் திட்டினார்.

ஆனால், அன்றிலிருந்து என் குடும்பத்தினருக்கு அலாதி மரியாதை. நான் அவருக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியை ஆயிற்றே!

 

சிறு லாபம், கடுமையான உழைப்பு

 

பொதுவாக, எந்தத் துறையானாலும், பிரதிபலனை எதிர்பார்க்காது நேர்மையான வழியில் சென்றால் என்றாவது பலன் கிடைக்கும்.

 

லாபம் சிறிதாக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைப்பது வியாபாரத்தில் முன்னுக்கு வரும் வழி.

 

சில கடைகளில் சிப்பந்திகள் எல்லாரும் சிரித்த முகமாக இருப்பார்கள். நமக்கு வேண்டிய பொருள் இன்னதென்று கோடி காட்டினாலே போதும். புரிந்துகொள்வார்கள். அவர்கள் முதலாளியால் நல்லவிதமாக நடத்தப்படுகிறார்கள் என்று அவர்களுடைய பணிவிலிருந்தும், வேலையில் அவர்கள் காட்டும் ஆர்வத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.

 

கதை

 

தமிழ்நாட்டிலிருந்து வந்த சாப்பாட்டுக்கடை சிப்பந்தி வேலு. ஐம்பது வயதிருக்கும்.

ஒரு மாலை வேளையில், நான் அங்கு போயிருந்தபோது, அவர் முகம் சிடுசிடுவென்று இருந்தது.

ரொம்ப வேலையா?” என்று கேட்டேன், மெல்ல.

நம் நலனில்கூட ஒருவர் அக்கறை காட்டுகிறாரே!’ என்ற நிறைவுடன், தன் கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பதுவரை வேலை. அதன்பின், கணக்குவழக்கைப் பார்க்கவேண்டும்.

சாப்பாடு இலவசம் என்றாலும், குடும்பத்தைவிட்டு, தனியாக அயல்நாட்டில் உழைப்பது எளிதல்ல.

வந்துவிட்டாலோ, புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டியதுதான். எரிச்சலுடன்/ வெறுப்புடன்  செயல்பட்டால், பணம் கிடைத்தாலும், மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்குமா?

 

:-நிர்மலா ராகவன்/எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 

👉அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக 

👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக  



திருக்குறள்...-/52/-தெரிந்து வினையாடல்



திருக்குறள் தொடர்கிறது




52. தெரிந்து வினையாடல்

👉குறள் 511:

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

மு. உரை:

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.

English Explanation:

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.

 

👉குறள் 512:

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை

ஆராய்வான் செய்க வினை.

மு. உரை:

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

கலைஞர் உரை:

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.

English Explanation:

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).

 

👉குறள் 513:

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.

மு. உரை:

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

சாலமன் பாப்பையா உரை:

நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

கலைஞர் உரை:

அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

English Explanation:

Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.

 

👉குறள் 514:

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.

மு. உரை:

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:

எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

கலைஞர் உரை:

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

English Explanation:

Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

 

👉குறள் 515:

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்சிறந்தானென் றேவற்பாற் றன்று.

மு. உரை:

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

கலைஞர் உரை:

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது.

English Explanation:

(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

 

👉குறள் 516:

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ

டெய்த உணர்ந்து செயல்.

மு. உரை:

செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

கலைஞர் உரை:

செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

English Explanation:

Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

 

👉குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்ததனை அவன்கண் விடல்.

மு. உரை:

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

கலைஞர் உரை:

ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

English Explanation:

After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.

 

👉குறள் 518:

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

மு. உரை:

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

கலைஞர் உரை:

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.

English Explanation:

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

 

👉குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்குந் திரு.

மு. உரை:

மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீங்குவாள்.

கலைஞர் உரை:

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

English Explanation:

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

 

👉குறள் 520:

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

மு. உரை:

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞர் உரை:

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

English Explanation:

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக... 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து